Paytm
PhonePe
Gpay
இருள் சூழ்ந்த ஒரு இரவு…
உயிர் பிழைக்க ஒரு கடவுளை தேடும் மனிதன்…
![]() |
| கற்பனை புகைபடம் |
விடிந்தால்தான் தெரியும்
— தங்கதமிழன்
இப்போது யாரும் இல்லை
எதுவும் இல்லை
இந்த இடத்தில் தான்
ஒரு கடவுள் தேவைப்படுகிறார்
மாலை சூரியன்
மங்கிக் கொண்டிருக்கிறது
என் கண்முன்னும்
ஒவ்வொன்றாக மறைகின்றன
எங்கே போவேன்
எப்படி போவேன்
பாதைகள்
மறைந்து கொண்டிருக்கின்றன
வழிகள் எல்லாம்
இருளைப் போர்த்திக்கொள்கின்றன
மீண்டும்
இந்த உலகத்திற்கு சென்றால்
உயிரோடு விடமாட்டார்கள்
பறவைகளின் அலறல் சத்தம்
கொஞ்சம் கொஞ்சமாக
காதுகளுக்கு விழுகின்றன
சில மிருகங்களின்
பயமுறுத்தும் குரல்களும்
இரவைக் கிழித்தபடி
ஒலிக்கின்றன
என் கால்களை
எங்கே எடுத்து வைப்பது
முள்மீதா
பூமீதா
செடிகளும் கொடிகளும்
பாம்புகளைப் போலவே
என் கால்களில்
நெளிகின்றன
இப்போதுதான்
இந்த இடத்தில் தான்
என்னை காப்பாற்ற
ஒரு கடவுள் தேவைப்படுகிறார்
இப்போது
எப்படி இருந்தாலும்
கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்
இதற்கு முன்னாலும்
கடவுளை தேடியதுண்டு
கடவுளிடம் கேட்டதுமுண்டு
இதுவரை
ஒன்றும் கொடுக்காதவர்
இப்போதுதான்
கொடுக்கப் போகிறாரா?
இருந்தாலும்
இந்த இடத்தில்
எனக்கு ஒரு
கடவுளின் அன்பு தேவை
அந்த அன்பு
மரணத்தை பரிசளித்தாலும்
பரவாயில்லை
நான் எங்கே இருக்கிறேன் என்று
எனக்கே தெரியவில்லை
கத்தி கத்தி அழைத்த
கடவுளும்
இதுவரை வரவில்லை
என் குரலின் சத்தங்களும்
மெல்ல மெல்ல
மங்குகின்றன
என் கண்களை
இறுக்கமாக மூடிக்கொண்டேன்
விடிந்தால்தான் தெரியும்
— தங்கதமிழன்
0 Comments