மிருகங்களில் உயர்ந்த மிருகம் எது?
உயர்ந்த மிருகம்
மிருகங்களில்
உயர்ந்த மிருகம் எது
என்று கேட்டார்கள்…
காட்டில் வாழும்
சிங்கமா என்றேன் இல்லை…
விஷம் கொண்ட
பாம்பா என்றேன் இல்லை…
தந்திரம் நிறைந்த
நரியா என்றேன் இல்லை…
அப்படியானால்
எது உயர்ந்த மிருகம்
என்று கேட்டார்கள்…
எல்லா மிருகங்களின்
குணத்தையும்
தன்னுள் வைத்திருக்கும்
மனிதன்தானே
உயர்ந்த மிருகம்…!
அன்பு அனாதையா?
அவனை
அவள் ஏமாற்றினாள்…
அவளை
வேறொருவன் ஏமாற்றினான்…
ஏமாற்றப்பட்டவர்கள் மட்டும் அல்ல,
ஏமாற்றத் தெரிந்தவர்களும்
காயங்களோடு தான் வாழ்கிறார்கள்…
ஒருவரின் இதயத்தில்
மற்றொருவர் பொய் விதைத்து,
அதை காதல் என்று பெயரிட்டுக் கொண்டு
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…
நம்பிக்கையை உடைத்த கைகளே
“உண்மையான அன்பு இல்லை” என்று
ஸ்டேட்டஸ் எழுதுகின்றன…
துரோகம் செய்த கண்களே
“அன்பு ஒன்றே அனாதை” என்று
கண்ணீர் எமோஜி வைக்கின்றன…
உண்மையில்
அன்பு அனாதை அல்ல…
அதை உண்மையாக நேசிக்கத் தெரிந்த
மனிதர்கள்தான்
இப்போது அரிதாகிப் போயிருக்கிறார்கள்…
— தங்கத்தமிழன்
0 Comments